இருட்டுக்குள் ஆட்டோவை திருப்பிய டிரைவர்… கதறிய 15 வயது சிறுமி… முக்கூடல் அருகே நடந்த அந்த நடுக்கடலில் உறைந்த நிமிடம்…!

By Nanthini on வைகாசி 16, 2026

Spread the love

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை கடத்திச் சென்று, கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளியான ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. பாப்பாக்குடி ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (42) என்ற ஆட்டோ டிரைவரே இந்த கொடூர குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட நபராவார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

   

கடந்த 2018 ஜூலை 7 அன்று இரவு, ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் இருந்து தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காகக் காத்திருந்த 15 வயது சிறுமியை, ராமச்சந்திரன் தனது ஆட்டோவில் ஏற்றியுள்ளார். வழியிலேயே மற்ற பயணிகளை இறக்கிவிட்ட அவர், முக்கூடல் கலியன்குளம் ஆர்ச் அருகே உள்ள ஒரு இருட்டான பகுதிக்கு ஆட்டோவை கடத்திச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து தப்பிக்க முயன்ற சிறுமியை ராமச்சந்திரன் கொடூரமாகத் தாக்கி, மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து சேரன்மகாதேவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி ராமச்சந்திரனை கைது செய்தனர்.

   

இவ்வழக்கை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சங்கரேஸ்வரி மற்றும் மங்கையர்க்கரசி ஆகியோர் திறம்பட விசாரித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அரசு தரப்பு வழக்கறிஞர் உஷா, குற்றவாளிக்கு மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று வலுவாக வாதிட்டார்; கோர்ட் போலீசாக யாஸ்மின் செயல்பட்டார். வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், ஆட்டோ டிரைவர் ராமச்சந்திரன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் அவருக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 

மேலும், சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்றதற்காக (IPC 417), கொடூரமாக தாக்கியதற்காக (IPC 323) மற்றும் கொலை மிரட்டல் விடுத்ததற்காக (IPC 506(1)) ஆகிய பிரிவுகளின் கீழ் தலா ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், தனித்தனியே அபராதமும் விதிக்கப்பட்டது. அனைத்து சிறை தண்டனைகளையும் ஏககாலத்தில் (ஒரே காலத்தில்) அனுபவிக்க உத்தரவிட்ட நீதிபதி, ஒட்டுமொத்தமாக ராமச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனையுடன் சேர்த்து 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பை நிறைவு செய்தார். இந்த அதிரடி தீர்ப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான எச்சரிக்கையாக அமைந்துள்ளது.