தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசை விமர்சித்து வருகின்றன. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, தவெகவின் நிர்வாகத் திறனையும் அதன் செயல்பாடுகளையும் கடுமையாகச் சாடியுள்ளார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூறிவிட்டு, தற்போது தவெகவின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தவெக தலைமை மக்கள் நலனில் அக்கறை காட்டாமல், தங்களது பதவியையும் ஆட்சியைத் தக்க வைப்பதையும் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதாக சரவணன் குற்றம் சாட்டியுள்ளார். யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது, யாரை அமைச்சரவையில் சேர்ப்பது என்பதில் மட்டுமே அவர்கள் கவனம் உள்ளதே தவிர, தமிழக மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் குறித்தோ, சட்டம் ஒழுங்கு குறித்தோ அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்றும், தங்களின் தவறுகளை இணையதளப் படையினரைக் கொண்டு நியாயப்படுத்திவிடலாம் என்ற ஆணவத்தில் அவர்கள் இருப்பதாக அவர் சாடியுள்ளார்.
மறுபுறம், தமிழகத்தில் நடைபெறும் தொடர் கொலைகள் குறித்து பாஜ எந்தக் கருத்தும் கூறாமல் மௌனம் காப்பதாக சரவணன் சுட்டிக்காட்டியுள்ளார். வாயில் வாழைப்பழம் வைத்திருப்பது போல பாஜ காக்கும் இந்த மௌனம், தவெக என்பது ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜவின் ‘பி’ டீம் (B-Team) தான் என்று திமுக தொடர்ந்து கூறி வரும் குற்றச்சாட்டை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
