தமிழக அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் விதமாக, பரம எதிரிகளாகக் கருதப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் இன்று சட்டசபை வளாகத்தில் சுமார் 30 நிமிடங்கள் ரகசிய ஆலோசனை நடத்தியது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்த நிலையில், திமுக இரண்டாம் இடத்திற்கும், அதிமுக மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு எதிராக அக்கட்சியினுள்ளேயே போர்க்கொடி தூக்கப்பட்டுள்ள சூழலில், இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
நடப்புத் தேர்தலில் அதிமுக எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்தது அக்கட்சித் தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஓரம் கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது. இன்று சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வின் போது, அதிமுக எம்.எல்.ஏக்கள் தனித்தனி அணிகளாகப் பிரிந்து வந்திருந்தனர். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற போது நிலவிய அமைதியை விட, எஸ்.பி. வேலுமணி பதவியேற்ற போது அவையில் எழுந்த பலத்த மேஜை தட்டல் ஒலிகள், கட்சியின் அதிகார மையம் அவர் பக்கம் சாய்ந்து வருவதை வெளிப்படையாகக் காட்டியது.
கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், எஸ்.பி. வேலுமணி தலைமையில் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் விஜய்யின் தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்புள்ளதாகப் பேசப்படுகிறது. மேலும், அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணியைத் தேர்ந்தெடுத்து, அதன் மூலம் பழனிசாமியின் அதிகாரத்தைப் பறிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. இந்த அதிகாரப் போட்டியில் தங்களுக்குச் சாதகமான சூழலை உருவாக்கவும், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் விவாதிக்கவே செந்தில் பாலாஜியுடன் வேலுமணி கைகோர்த்திருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
எதிரும் புதிருமாக மோதி வந்த இரு துருவங்கள் தற்போது கைகோர்த்திருப்பது, தமிழக அரசியலில் புதிய கூட்டணியோ அல்லது அதிமுகவில் மிகப்பெரிய மாற்றமோ நிகழப்போவதை உறுதிப்படுத்துகிறது. ஒருபுறம் தவெகவின் அசுர வளர்ச்சி, மறுபுறம் அதிமுகவின் உள்கட்சிப் பூசல் எனத் தமிழக அரசியல் களம் தகிக்கும் நிலையில், செந்தில் பாலாஜி – எஸ்.பி. வேலுமணி சந்திப்பு எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலத்திற்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. இந்தத் திடீர் சந்திப்பு அதிமுகவில் ஏற்படப்போகும் “பூகம்பத்திற்கு” அச்சாரமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
