தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து சந்தித்து வருகிறது. பாஜகவுடன் இ பி எஸ் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர். அதன் வெளிப்பாடாக சமீபத்தில் செங்கோட்டையன் பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க இபிஎஸ்-க்கு கெடு விதித்திருந்தார். ஆனால் அதற்கு அடுத்த நாளே செங்கோட்டையனை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து டெல்லி சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசியதாக செங்கோட்டையன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதே சமயம் செங்கோட்டையன் அடுத்த கட்ட நகர்வு என்பது உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இந்நிலையில் ஈரோட்டில் அண்ணாவின் பிறந்தநாளை இபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் தனித்தனியாக கொண்டாடினர். பிரிந்து இருக்கும் அதிமுகவினரை இணைப்பதில் உறுதியாக இருக்கும் செங்கோட்டையன், கடந்த ஐந்தாம் தேதி மனம் திறந்து பேசியதற்கு அதிமுக தொண்டர்களிடமும் பொது மக்களிடமும் ஆதரவு பெருகியுள்ளதாக தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்தை இபிஎஸ்-க்கு மீண்டும் அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
