“அதிமுகவின் எதிர்காலம் அவ்ளோதானா?”…. போட்டுடைத்த செங்கோட்டையன்… தமிழக அரசியலை தலைகீழாக மாற்றிய தவெக-வின் அடுத்த ஸ்கெட்ச்….!

By Nanthini on ஆனி 7, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தின் அரசியல் களம் முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புதிய ஆட்சியை அமைத்துள்ள நிலையில், அதுவரை ஆளுங்கட்சியாக இருந்த திமுக எதிர்க்கட்சியாக மாறியுள்ளது. தமிழகத்தை நீண்டகாலம் ஆட்சி செய்த அதிமுக, வரலாறுகாணாத வகையில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், அதிமுகவின் பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனர். இன்றுகூட அதிமுகவின் 3 முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைந்துள்ள செய்தி அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

இந்த இக்கட்டான அரசியல் சூழ்நிலையில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெகவின் தற்போதைய அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் எதிர்காலம் குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா ஆகியோரின் காலம் வேறு; இன்றைய அரசியல் சூழல் முற்றிலும் வேறு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தற்போதைய நிலையில் அதிமுகவின் எதிர்காலம் என்பது முற்றிலும் கேள்விக்குறியாகவே இருக்கிறது” என்று ஓப்பீட்டாகத் தெரிவித்துள்ளார்.

   

மேலும், தமிழகத்தில் நடைபெற்று வரும் தவெகவின் தற்போதைய ஆட்சி மற்றும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் விரிவாகப் பேசினார். “தென்மேற்குப் பருவமழையால் தமிழகத்தில் நிலச்சரிவுகளோ பெரிய சேதங்களோ ஏற்பட வாய்ப்பில்லை. கேரளாவில் நிகழ்ந்தது போன்ற அசம்பாவிதங்கள் இங்கு நடந்துவிடக் கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார். அதனடிப்படையில் நீலகிரி, கோவை பகுதிகளில் 24 மணி நேரக் கண்காணிப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மக்கள் தேடி வந்து கேட்காத அளவுக்கு உடனுக்குடன் நிவாரணப் பணிகளை ஆற்ற வேண்டும் என்பதே முதலமைச்சரின் ஆணை” என்று அவர் குறிப்பிட்டார்.

 

மக்களுக்குத் தூய்மையான நல்லாட்சியைத் தருவதற்காக முதலமைச்சர் நாள்தோறும் புதிய திட்டங்களை அறிவித்து வருவதாகவும், இதைப் பார்த்துவிட்டுத்தான் மாற்றுக்கட்சியினர் தவெகவில் இணைந்து வருவதாகவும் செங்கோட்டையன் பெருமிதத்துடன் கூறினார். இறுதியாகப் பேசிய அவர், “இன்றைய தேதியில் நல்லாட்சி நடத்தக்கூடிய சிறந்த தலைவராக விளங்கும் தளபதி விஜய் தமிழ்நாட்டில் இருக்கும் வரை அவரே முதலமைச்சராக நீடிப்பார்; அவரது பின்னால் அணிவகுக்கும் மக்களுக்கு எனது வாழ்த்துகள்” என்று கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.