தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள் சென்னை செல்வதற்காகக் கோவை விமான நிலையம் வந்தபோது, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த வெற்றி மக்கள் ஆதரவால் தவெக தலைவருக்குக் கிடைத்துள்ள மகத்தான வெற்றி என்று குறிப்பிட்ட அவர், ஒரு இயக்கம் வளரத் தியாகம் மிக அவசியம் என்றார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் தியாகத்தால் வளர்ந்த அதிமுக தற்போது தடுமாறிக் கொண்டிருப்பதாகவும், “தான்” என்ற அகந்தை கொண்டவர்களுக்குத் தெய்வம் உரியப் பாடத்தைப் புகட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக, ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் முதல் தேர்தலிலேயே தவெக மாபெரும் சரித்திர வெற்றி படைத்துள்ளதாகச் செங்கோட்டையன் பெருமிதம் தெரிவித்தார். மக்கள் விஜய்யை நேசிப்பதாகவும், அவர்களுக்கு அவர் என்றும் உறுதுணையாக இருப்பார் என்றும் அவர் கூறினார். “தெய்வத்தால் ஆகாதது ஒன்றுமில்லை” எனக் குறிப்பிட்ட அவர், இறைவனின் அருளால் தளபதி விஜய் விரைவில் ஆட்சிப் பீடத்தில் அமர்வார் எனத் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை பலம் தவெக-விடம் இல்லை என்பது குறித்தும், கூடுதல் கட்சிகள் ஆதரவு அளிக்குமா என்பது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த செங்கோட்டையன், தவெக ஆட்சி அமைக்கக் கூடுதல் கட்சிகள் நிச்சயம் ஆதரவு தரும் என உறுதியாகக் கூறினார். “நாளை மறுநாள் பாருங்கள்” என அவர் விடுத்த அதிரடி பதில், தமிழக அரசியலில் அடுத்த சில நாட்களில் பெரிய மாற்றங்கள் நிகழப்போவதை உறுதிப்படுத்தும் வகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
