மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில், 54 வயதான உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஜாதவ் என்பவர் தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி பெண் கைதி ஒருவரிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 80 லட்சம் ரூபாய் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு காவலில் இருந்த அந்தப் பெண்ணிடம், பாலியல் சலுகைகளுக்காக அவரது மகளை தன்னிடம் அனுப்புமாறு ராஜேஷ் ஜாதவ் கேட்டுள்ளார். இதற்காக அந்தப் பெண்ணுக்கு பணம் தருவதாகவும் ஆசை காட்டி அவர் மயக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
இந்த அநாகரிகமான கோரிக்கையால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக உயர் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து, உயர் அதிகாரிகள் அந்த உதவி ஆய்வாளரை நேரில் வரவழைத்து கடுமையாகக் கண்டித்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலான நிலையில், காவல்துறை நிர்வாகத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. ஒரு காவல்துறை அதிகாரியே பாதுகாப்பு தேடி வந்த பெண்ணிடம் இத்தகைய கீழ்த்தரமான கோரிக்கையை வைத்தது பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்ச்சித் சந்தக் இந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்து, உதவி ஆய்வாளர் ராஜேஷ் ஜாதவை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அவர் மீது பெண்ணின் கண்ணியத்திற்குத் தீங்கு விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய அதிகாரியே குற்றச் செயலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், அவர் மீது கடும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
