தமிழ் சினிமாவில் தனக்கென தனது தனித்துவமான படங்களின் மூலம் ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் ‘துள்ளுவதோ இளமை’. ஆனால் அந்த படம் அவரின் தந்தையின் பெயரில் ரிலீஸ் ஆனது.
அதன் பின்னர் அவர் இயக்கிய காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி , புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன மற்றும் என் ஜி கே ஆகிய திரைப்படங்கள் அவருக்கு தனித்த அடையாளத்தை உருவாக்கின. ஆனால் அதன் பிறகு அவர் எடுத்த படங்கள் அவரின் தொடக்கக் கால படங்கள் கொடுத்த தாக்கத்தைக் கொடுக்கவில்லை.
தொடர்ந்து அவர் எடுத்த இரண்டாம் உலகம், என் ஜி கே மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. ஒரு கட்டத்தில் அவர் இயக்கிய படங்கள் வரிசையாக தோல்வி அடைய அவர் நடிகராகவும் அறிமுகமானார். அந்த வகையில் சாணிக்காயிதம், பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இறுதியாக இவர் நடிப்பில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ‘பகாசுரன்’ திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியே வந்த ‘நானே வருவேன்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் பின்னர் தனுஷ் இயக்கியுள்ள ராயன் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இப்போது செல்வராகவன் ‘7 ஜி ரெயின்போ காலனி 2’ மற்றும் ‘மெண்டல் மனதில்’ ஆகிய இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார். சில வருடங்களுக்கு முன்னர் ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டரையும் ரிலீஸ் செய்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தார்.
சமீபத்தில் அளித்த நேர்காணலில் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் பற்றி பேசியுள்ளார். அதில் “ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை ரொம்ப சீக்கிரமாகவே தனுஷை வைத்து அறிவித்துவிட்டோம். அந்த படத்தை இயக்க நான் வெறித்தனமாகக் காத்திருக்கிறேன். ஆனால் அந்த படத்தைக் கார்த்தி இல்லாமல் எடுக்க முடியாது. அதனால் நடிகர்களின் ஒருவருட கால்ஷீட்டும் ஒரு தயாரிப்பாளரும் கிடைத்தால் எடுத்து விடலாம். முதல் பாகம் போல இப்போது கஷ்டப்படத் தேவையில்லை” எனக் கூறியுள்ளார்.