பாபநாசம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனிஸ் பாத்திமா மற்றும் அக்கட்சியினர் மீது திமுகவினர் நடத்திய தாக்குதலுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அனிஸ் பாத்திமா ஒரு கர்ப்பிணிப் பெண் என்பதைக் கூடப் பாராமல் திமுகவினர் இத்தகைய கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வன்முறைச் செயலில் ஈடுபட்ட திமுக “முரடர்கள்” மீது உடனடியாக கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, அவர்களைக் கைது செய்ய வேண்டும் என சீமான் தமிழக காவல்துறைக்கு வலியுறுத்தியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து நேற்றே காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டும், இதுவரை குற்றவாளிகள் எவரும் கைது செய்யப்படாதது ஏன்? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். காவல்துறையின் இந்த மெத்தனப்போக்கு கண்டிக்கத்தக்கது என்றும், குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கத் தவறினால், நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தனது எக்ஸ் (X) தளப் பதிவின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுகவின் இத்தகைய அராஜகப் போக்கு ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அவர் சாடியுள்ளார்.
