நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தலில் தங்கள் கட்சி சந்திக்கும் புறக்கணிப்புகள் குறித்து வேதனை தெரிவித்துள்ளார். “நாங்கள் தேர்தலில் போட்டியிட்டால் கூட அதனை மும்முனைப் போட்டி என்றுதான் ஊடகங்களும் அரசியல் விமர்சகர்களும் சொல்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக எங்களை ‘மற்றவை’ என்ற பட்டியலிலேயே வைத்திருக்கிறார்கள்” என்று அவர் பேசியுள்ளார். பல தேர்தல்களில் கணிசமான வாக்குகளைப் பெற்ற பிறகும், பிரதான கட்சிகளுக்கு இணையாகத் தங்கள் கட்சி அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் பரபரப்பாகி வரும் நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பாஜக மற்றும் பிற கட்சிகள் முக்கியத்துவம் அளித்து வருவதை ஒப்பிட்டு சீமான் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். களத்தில் தொடர்ந்து போராடினாலும் தங்களை ஒரு மாற்றாக ஏற்க மறுக்கும் அரசியல் சூழலை விமர்சித்துள்ள அவர், வரும் தேர்தலில் மக்கள் தங்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
