“15 வருஷமா ஒன் சைடு லவ்ல இருக்கேன்!”… “என் காதலைப் புரிஞ்சுக்கிட்டா நான் ஜெயிச்சிடுவேன்!” – மேடையிலேயே உருகிய சீமான்…!

By Nanthini on சித்திரை 15, 2026

Spread the love

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. காரைக்குடி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களை நிறுத்தி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், தனது தனித்துவமான பாணியில் மக்களிடையே பேசி சீமான் வாக்குகளைச் சேகரித்தார்.

பிரச்சாரத்தின் போது தனது அரசியல் பயணத்தை காதலோடு ஒப்பிட்டுப் பேசிய சீமான், “நான் கடந்த 15 ஆண்டுகளாக மக்களைக் காதலித்துக் கத்திக் கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த மக்கள் என்னை இன்னும் கண்டுகொள்ளவில்லை. நான் நீண்ட நாட்களாக ஒருதலைக் காதலாகவே (One Side Love) போய்க் கொண்டிருக்கிறேன். என் காதலை மக்கள் புரிந்து கொண்டால், நான் நிச்சயம் வெற்றி பெற்றுவிடுவேன்” என்று சற்று ஆதங்கத்துடனும் நகைச்சுவை உணர்வுடனும் குறிப்பிட்டார்.

   

மற்ற அரசியல் கட்சிகள் பணம் கொடுத்து மக்களை ஏமாற்றுவதைக் கடுமையாகச் சாடிய அவர், எதிர்க்கட்சிகளின் வாக்குறுதிகளை எள்ளி நகையாடினார். “அவர்கள் ரூ.2,000 தருகிறோம் என்று சொல்வதை மக்கள் நம்புகிறார்கள். நானும் மற்றவர்களைப் போலவே பொய் சொல்லலாம் என்று நினைக்கிறேன், ஆனால் என் மனம் இடங்கொடுக்கவில்லை. ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் ஒரு கிலோ தங்கம், வைர நகை, வெளிநாட்டிற்குத் தேனிலவுச் சுற்றுலா என எது கேட்டாலும் தருகிறேன் என்று நான் சொன்னால் மக்கள் சிரிக்கிறார்கள்” என கிண்டலாகப் பேசினார்.

   

இறுதியாக, இலவசத் திட்டங்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று கோரிக்கை விடுத்த சீமான், தனது கட்சியின் கொள்கைகளை முன்வைத்தார். வீட்டிற்கு இருவருக்கு அரசு வேலை, வட இந்தியர்களின் ஆதிக்கம் இல்லாத தமிழகம், தரமான கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை உறுதி செய்வதாகத் தெரிவித்தார். மேலும், மது விற்பனையை முற்றிலும் ஒழித்துவிட்டு, அதற்கு மாற்றாகப் பனம்பால் மற்றும் தென்னம்பால் போன்ற இயற்கை பானங்களை அரசு விற்பனை செய்யும் என்ற தனது நீண்ட காலத் திட்டத்தையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.