பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள பகா (Bagaha) அரசு மருத்துவமனையில், ஒரு பாதுகாப்பு ஊழியர் (Security Guard) நோயாளிக்குத் தையல் போடும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பகா அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத காரணத்தால், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ஒரு ஊழியர், விபத்தில் காயமடைந்து வந்த நோயாளி ஒருவரின் காயங்களுக்குத் தையல் போட்டுள்ளார். இந்தச் செயல் அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் பரவியது. ஒரு பாதுகாப்பு ஊழியர் மருத்துவ சிகிச்சை அளிப்பது நோயாளியின் உயிருக்கே ஆபத்தானது என்று பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, மருத்துவமனையில் நீண்டகாலமாக ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். விபத்தில் சிக்கிய ஐந்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் ஒரே நேரத்தில் வந்ததால், வேறு வழியின்றி மருத்துவரின் மேற்பார்வையின் கீழ் அந்த ஊழியர் உதவி செய்ததாக துணை கண்காணிப்பாளர் டாக்டர் அசோக் குமார் திவாரி விளக்கம் அளித்துள்ளார். பீகாரின் அரசு சுகாதாரக் கட்டமைப்பின் அவல நிலையைச் சுட்டிக்காட்டும் விதமாக இந்த ‘முன்னா பாய் எம்பிபிஎஸ்’ பாணி சம்பவம் அமைந்துள்ளது.
