இந்திய இரயில்வேயின் 3-அடுக்கு ஏசி பெட்டியில் கழிவறைக்கு அருகிலுள்ள காலி இடத்தை முன்பதிவு செய்யப்படாத பயணிகளுக்கு விற்பனை செய்த விற்பனையாளர் ஒருவரின் செயல் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரீவா – ஆனந்த் விஹார் எக்ஸ்பிரஸ் ரயிலில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை சக பயணி ஒருவர் வீடியோ எடுத்து அம்பலப்படுத்தியுள்ளார்.
அந்த வீடியோவில், கழிவறை பகுதியில் திரைச்சீலைகளைக் கட்டி தற்காலிக இடவசதியை உருவாக்கி, ஒரு மேல் இருக்கையை 3200 ரூபாய்க்கும், கீழ் இருக்கைகளை தலா 1600 ரூபாய்க்கும் அந்த விற்பனையாளர் சட்டவிரோதமாக விற்றதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
“>
மேலும் ரயில்களில் பயணச்சீட்டு வழங்கும் அதிகாரம் பரிசோதகர்களுக்கு மட்டுமே உள்ள நிலையில், இதுபோன்ற விற்பனையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ரயிலின் சில பகுதிகளை ஆக்கிரமித்து அதிக விலைக்கு விற்பது பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து புகாரளித்தால் ரயிலை விட்டு இறக்கிவிடுவதாக ஊழியர்கள் மிரட்டுவதாகவும் அந்தப் பயணி வீடியோவில் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, இரயில்வே நிர்வாகம் இத்தகைய முறைகேடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளப் பயனர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
