கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே லாலிக்கல் கிராமத்தில் உள்ள தனியார் பெண்கள் தங்கும் விடுதியின் குளியலறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. விடுதியில் தங்கியிருந்த பெண்கள் குளியலறையில் கேமரா இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இது தொடர்பாகக் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அதே விடுதியில் தங்கியிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நீலுகுமாரி குப்தா (22) என்பவர் கேமராவைப் பொருத்தியது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
விசாரணையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த தனது காதலன் ரவி பிரதாப் சிங் (29) வற்புறுத்தியதன் காரணமாகவே குளியலறையில் ரகசிய கேமராவைப் பொருத்தியதாக நீலுகுமாரி ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த காதலன் ரவி பிரதாப் சிங்கையும் காவல்துறையினர் தேடிப் பிடித்துக் கைது செய்தனர். தனியார் விடுதியில் ரகசிய கேமரா கண்டறியப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
