கூட்டணி விவகாரத்தில் தேமுதிக எடுத்த முடிவால் அதிருப்தியடைந்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அந்த கட்சிக்கு எதிராகப் புதிய வியூகம் (ஸ்கெட்ச்) ஒன்றை வகுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பல மாதங்களாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த தேமுதிக, திடீரென திமுக கூட்டணியைத் தேர்ந்தெடுத்தது எடப்பாடி பழனிசாமிக்கு கடும் அப்செட்டை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, தேமுதிகவின் அடித்தளத்தை ஆட்டுவிக்கும் நோக்கில் அவர் புதிய திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த புதிய திட்டத்தின்படி, தேமுதிக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் அந்த கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை ரகசியமாக அணுக அதிமுக தரப்பு முடிவு செய்துள்ளது. அவர்களைத் திரட்டி அதிமுகவில் இணைப்பதற்கான ஒரு ‘சீக்ரெட் அசைன்மென்ட்’ ஒன்றை எடப்பாடி பழனிசாமி தனது நம்பிக்கைக்குரிய நிர்வாகிகளிடம் கொடுத்துள்ளதாகப் பேசப்படுகிறது. தேர்தல் நெருங்கும் வேளையில் தேமுதிகவின் முக்கிய நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம் அந்தக் கட்சிக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.
