மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விநியோகம் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக பாகிஸ்தானில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தச் சூழலைச் சமாளிக்க, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அடுத்த இரண்டு வாரங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்காகப் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி, அரசு அதிகாரிகளுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் ஒதுக்கீடு உடனடியாக 50 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர்களின் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாகப் பஞ்சாப் மாகாணத்தில் மார்ச் 10 முதல் மார்ச் 31 வரை கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணிபுரியும் (Work-from-home) முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
வங்கிகளைத் தவிர மற்ற அனைத்து அரசு அலுவலகங்களும் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே இயங்கும் என்றும், 50 சதவீத ஊழியர்களுடன் மட்டுமே செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், பொருளாதாரச் சுமையைக் குறைக்கப் பாகிஸ்தான் அரசு இத்தகைய கடினமான முடிவுகளை எடுத்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் அங்குள்ள பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதிலும் சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர்.
