கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் நிலைப்பாடுகளைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரையே மதிக்காதவர் என்றும், தனது பெயரைப் பயன்படுத்தக் கூடாது எனத் தன் தந்தைக்கே தடை விதித்தவர் என்றும் விஜய்யைச் சாடிய அவர், இத்தகைய ஒரு நபர் மக்களுக்கு எப்படி உண்மையாக இருப்பார்? என கேள்வி எழுப்பினார்.
மேலும், படங்களில் விவசாயம் மற்றும் சென்டிமென்ட் குறித்துப் பேசும் விஜய், நிஜ வாழ்க்கையில் அதற்கு முரணாக நடப்பதாக விமர்சித்தார். குறிப்பாக, கரூரில் தவெக உறுப்பினர் சேர்க்கை முகாமில் ஏற்பட்ட துயர சம்பவத்தின்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறாமல் உடனடியாக அங்கிருந்து வெளியேறிய “ஓடுகாலி” என ஒருமையில் விமர்சித்தார். கட்சியின் 3-ம் ஆண்டு விழாவில் விஜய் நடனமாடியதைச் சுட்டிக்காட்டிய அவர், உயிரிழப்புகள் நடந்த இடத்தில் ஒரு தலைவரால் எப்படி இவ்வளவு அலட்சியமாக இருக்க முடிகிறது என்றும், இது ஒரு “சைக்கோ” தனமான செயல் என்றும் ஆவேசமாகப் பேசினார்.
