நடிகர் சத்யராஜ், தமிழ் சினிமாவில் சின்ன சின்ன பாத்திரங்களில் நடித்து வந்த காலகட்டம் அது. அப்போது ராமநாராயணன் இயக்கிய ஒரு படத்தில் மோகன் ஹீரோவாக நடித்து இருக்கிறார். அதே படத்தில் துணை நடிகர் பாத்திரத்தில் சத்யராஜூம் நடித்துள்ளார். ஒரு பாடல்காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அப்போது தன்னுடன் டான்ஸ் ஆடிய நடிகை சில்க் ஸ்மிதாவின் காலை தெரியாமல் மிதித்து விட்டார் நடிகர் சத்யராஜ்.
உடனே அதற்கு கோபப்பட்ட சில்க் ஸ்மிதா, சத்யராஜ் வேண்டும் என்றே என் காலை மிதித்து விட்டார். இனி அவருடன் நடிக்க மாட்டேன் என கோபமாக சொல்லிவிட்டு ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு சென்றுவிட்டார் சில்க் ஸ்மிதா. சத்யராஜ், ஜமீன்தார் குடும்பத்தை சேர்ந்தவர். மிக வசதியான வீட்டுப்பிள்ளை. அவர் சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில், அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் சின்ன சின்ன கேரக்டர்களில் எல்லாம் நடித்துக்கொண்டு இருக்கிறார். அவருக்கு டான்ஸ் ஆடி பழக்கமில்லை. அதனால் அவர் உங்கள் காலை தெரியாமல்தான் மிதித்து விட்டார் என்று சமாதானப்படுத்தி மீண்டும் அந்த பாடல் காட்சியில் நடிக்க வைத்துள்ளனர்.
அடுத்தடுத்த சில படங்களில் சத்யராஜூடன் நடித்த சில்க் ஸ்மிதா, ஜீவா என்ற படத்தில் சத்யராஜூடன் நடித்த போது மிகவும் நெருக்கமான தோழியாக மாறிவிட்டார். தனது காதல் உள்பட அனைத்து அந்தரங்க விஷயங்களையும் சத்யராஜூடன் பகிர்ந்து கொண்டார் என, நடிகர் சித்ரா லட்சுமணன் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். உலகம் பிறந்தது எனக்காக, வில்லாதி வில்லன் போன்ற சத்யராஜ் படங்களில், சில்க் ஸ்மிதாவின் நடன பாடல்கள் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.