“உங்க வாழ்க்கையிலயே மறக்க முடியாத சம்பவம் எது சார்?”- கேள்வி கேட்ட பத்திரிக்கையாளருக்கு தக் லைஃப் பதில் கொடுத்த கவுண்டமணி!

By vinoth on ஜூன் 4, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் கோலோச்சிய நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை போட்டால் அதில் தவிர்க்க முடியாத ஒரு இடத்தில் இருப்பார் கவுண்டமணி. 60களிலேயே சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில், முகம் தெரியாத கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணிக்கு பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படம்தான் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் இருந்து அவரை டிரிகர் செய்யும் கதாபாத்திரத்தில் கவுண்டமணி கலக்கியிருப்பார். படத்தில் அவர் சொல்லும் ‘பத்த வச்சிட்டியே பரட்ட்’ வசனம் இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறது.

16 வயதினிலே திரைப்படம் பெரிய ஹிட்டானதும் அடுத்தடுத்து அவருக்கான வாய்ப்புகள் உருவாகி, 80 களில் 90 களில் அவர் உச்ச நடிகரானார்.  80 களில் அவர் மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்தபோது அவருக்குக் கதாநாயகனாக நடிக்க சில படங்களில் வாய்ப்புகள் வந்தன. பிறந்தேன் வளர்ந்தேன் போன்ற சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால் அந்த படங்கள் சரியாக ஓடாததால் மீண்டும் காமெடியனாகி கதாநாயக நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெற்று கொடிகட்டிப் பறந்தார்.

   

கவுண்டமணி எல்லா வகையிலும் மற்ற நடிகர்களிடம் இருந்து வித்தியாசமானர். ஊடகங்களை வெகு அரிதாகதான் சந்தித்து பேட்டிக் கொடுத்துள்ளார். யாராவது பேட்டிக்காக நச்சரித்தால் “தம்பி இங்க பாரு… என்னோட வேல நடிக்குறது… உன்னோட வேல படத்த பாக்குறது. அதோட முடிச்சுக்குவோம்.. இந்த பேட்டி எல்லாம் தேவையில்லாதது…” என நாசூக்காக மறுத்துவிடுவாராம்.

   

அப்படியும் அவரோடு நெருக்கமாக இருந்த சில பத்திரிக்கையாளர்கள் அவரை வாயைப் பிடுங்க எதாவது கேட்டு விடுவார்களாம். அப்படி ஒரு பத்திரிக்கையாளர் கவுண்டமணியிடம் “உங்க வாழ்க்கையிலேயே நடந்த மறக்க முடியாத சம்பவம் எது சார்?” எனக் கேட்டுள்ளார். அதற்கு கவுண்டமணி “ காலையில என்ன சாப்ட?” எனக் கேட்டுள்ளார்.

 

அதற்கு அந்த பத்திரிக்கையாளர் யோசிக்க “பாத்தியா?… காலைல என்ன சாப்டேன்னு கூட ஞாபகம் வச்சிக்க முடியல… இது என்ன மறக்க முடியாத சம்பவம் வேண்டிக் கிடக்கு… போய் வேலைய பாரு” என சொல்லி அனுப்பிவிட்டாராம். இதை கவுண்டமணியின் நெருக்கமான நண்பர்களில் ஒருவரான சத்யராஜ் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.