“சத்யராஜ் சார் மூஞ்சுல அடிச்ச மாதிரி சொல்லிடுவாரு… எனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது” – இயக்குனர் செல்வமணி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

By vinoth on வைகாசி 4, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன் கூட்டத்தில் ஒருவனாக இருந்து எஸ் பாஸ் சொல்லியே நான் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன் எனக் கூறியுள்ளார். அதன் பிறகு பாரதிராஜா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இயக்கத்தில் அவர் நடித்த படங்கள் அவரை கதாநாயகனாக்கின.

தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். ஹீரோவாக நடித்த போது தமிழில் மட்டுமே நடித்து வந்த சத்யராஜ், இப்போது பிறமொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். சத்யராஜுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.  மகன் சிபிராஜ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இப்போதும் தன் மகனை விட பிஸியான நடிகராக இருந்து வருகிறார் சத்யராஜ்.

   

சத்யராஜ் கதாநாயகனாக புகழ்பெற்று நடித்த காலம் என்றால் 80 களின் இறுதி மற்றும் 90 களை சொல்லலாம். அந்த காலகட்டத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் சத்யராஜ் இருந்தார். இந்நிலையில் சத்யராஜ் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலை இயக்குனர் ஆர் கே செல்வமணி பகிர்ந்துள்ளார்.

   

அவர் அளித்த ஒரு நேர்காணலில் “நான் மணிவண்ணன் சாரிடம் சில படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். அப்போது சத்யராஜ் சார் எனக்கு நல்ல பழக்கம். அதனால் நான் இயக்குனர் ஆகவேண்டும் என நினைத்த போது அவரை வைத்து படம் பண்னலாம் என முடிவு செய்து அவரிடம் சென்றேன். என்னை வரவேற்று சாப்பிட வைத்த அவர் ‘என்ன விஷயம்’ என்று கேட்டார்.

 

நான் இதுபோல ஒரு கதை பண்ணியிருக்கேன் சார். நீங்க நடிச்சா நல்லா இருக்கும் என்றேன். அதைக் கேட்ட அவர் “சாரி செல்வமணி நான் புது இயக்குனர்களுக்கு இப்போது படம் பண்ணுவதில்லை” என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டார். எனக்கு அவர் அப்படி முகத்தில் அடித்தார் போல சொன்னது கஷ்டமாக இருந்தது. ஆனால் எனக்கு ஒரு கட்டத்தில் அவரின் அந்த குணம் பிடித்திருந்தது.

நாம் படம் பண்ணலாம் என சொல்லி என்னை ஒரு ஆறுமாதம் வரை அலைகழித்து பின்னர் வேண்டாம் என சொல்லாமல் முகத்துக்கு நேராக சொன்னார். அதனால் எனக்குதான் நேரம் மிச்சமானது. நான் வேறு ஹீரோக்களைத் தேட ஆரம்பித்தேன்” எனக் கூறியுள்ளார்.