தமிழ் சினிமாவில் வில்லனின் அடியாட்களில் ஒருவராக தோன்றி பின்னர் வில்லனாக உருவானவர் சத்யராஜ். தன்னைப் பற்றி பேசும் போது ‘வில்லன் கூட்டத்தில் ஒருவனாக இருந்து ‘எஸ் பாஸ்’ சொல்லியே நான் 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன் எனக் கூறியுள்ளார். அதன் பிறகு பாரதிராஜா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் இயக்கத்தில் அவர் நடித்த படங்கள் அவரை கதாநாயகனாக்கின.
தமிழ் சினிமாவில் தற்போது வரை சிறந்த நடிகராகவும் வில்லனாகவும் கலக்குபவர் நடிகர் சத்யராஜ். ஹீரோவாக நடித்த போது தமிழில் மட்டுமே நடித்து வந்த சத்யராஜ், இப்போது பிறமொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். சத்யராஜுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் சிபிராஜ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனால் இப்போதும் தன் மகனை விட பிஸியான நடிகராக இருந்து வருகிறார் சத்யராஜ்.
2005 வரை ஹீரோவாக நடித்து வந்த சத்யராஜுக்கு அப்போது மார்க்கெட் சரிய ஆரம்பித்தது. அதனால் அவர் மீண்டும் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் முடிவை எடுத்தார். அந்த முடிவு அவரை இன்று வரை பிஸியான நடிகராக வைத்துள்ளது. தென்னிந்திய மொழிகளில் மட்டும் இல்லாமல் தற்போது இந்தி படங்கள் வரை நடித்துக் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இப்போது மிஸ்டர் பாரத் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்துடன் கூலி படத்தில் இணைந்து நடித்து வருகிறார். இதுபற்றி சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் தனக்கேயுரிய நகைச்சுவைப் பாணியில் பேசியுள்ளார். அதில் “ரஜினி சாரோடு சிவாஜி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது முடியாமல் போய்விட்டது. அதற்குக் காரணம் அப்போது நானே ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தேன். நான் வில்லனாக நடித்தால் அந்த படங்களின் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் மறுத்தேன்.
ஆனால் வெளியே வேறு என்னவோ காரணங்கள் எல்லாம் பேசப்பட்டன. அதெல்லாம் உண்மையில்லை. இப்போது நான் குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கியதால் கூலி படத்தில் நடிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
