வருகின்ற 2026-ம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வி.கே.சசிகலா தனது புதிய அரசியல் பயணத்தை முறைப்படி தொடங்கியுள்ளார். அண்மையில் ‘அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ (அஇபுதமமுக) என்ற கட்சியின் பெயரை அறிவித்த அவர், கட்சியின் கொடி மற்றும் ‘தென்னந்தோப்பு’ சின்னத்தையும் அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
சசிகலாவின் கட்சி சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள், இன்று (மார்ச் 18, 2026) முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தின் முகாம் அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. மார்ச் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி வரை தகுதியான நபர்கள் தங்கள் விருப்ப மனுக்களைப் பூர்த்தி செய்து வழங்கலாம் என்று சசிகலா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விருப்ப மனுக்களுக்கான கட்டண விவரங்களையும் கட்சித் தலைமை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பொதுத் தொகுதியில் போட்டியிட விரும்புவோருக்கு ரூ. 5,000 மற்றும் தனித் தொகுதிகளுக்கு ரூ. 3,000 என விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை பொதுத் தொகுதிக்கு ரூ. 3,000 மற்றும் தனித் தொகுதிக்கு ரூ. 1,000 என கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை உரிய கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்திலிருந்தே சசிகலா தனது அரசியல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே வேட்பாளர் தேர்வு மற்றும் விருப்ப மனுக்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது, சசிகலா இந்தத் தேர்தலை மிகத் தீவிரமாக எதிர்கொள்ளத் தயாராகி வருவதைக் காட்டுகிறது. இதனால் போயஸ் கார்டன் பகுதியில் தற்போது சசிகலா ஆதரவாளர்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
