திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தொகுதியின் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ கு.அன்பழகன், அண்மையில் சசிகலா தலைமையிலான அஇபுதமமுகவில் இணைந்து அந்தத் தொகுதியின் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜவில் தனக்கு சீட் கிடைக்கும் என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் அரசியல் நகர்வுகளால் அதிருப்தியுற்று அவர் சசிகலா முகாமுக்கு மாறினார். இந்நிலையில், நிலக்கோட்டையில் நடைபெற்ற அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசிய சில தகவல்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன.
அக்கூட்டத்தில் பேசிய அன்பழகன், கடந்த 2001ஆம் ஆண்டு தான் அதிமுக சார்பில் நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டபோது, சசிகலா தாராளமாக நிதி வழங்கியதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். தனக்கு வேட்பாளர் வாய்ப்பு வழங்கியது மட்டுமின்றி, தேர்தல் செலவுகளுக்காக சசிகலா முதற்கட்டமாக 50 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், அந்தப் பணத்தை தான் இரண்டு ஒன்றியச் செயலாளர்களுக்குப் பிரித்துக் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அதைத் தொடர்ந்து மீண்டும் தனது தனிப்பட்ட செலவுக்காக சசிகலா 2 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல் செலவுக் கணக்குகள் தொடர்பாகக் கடுமையான விதிமுறைகள் இருக்கும் நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு தொகுதிக்காக சசிகலா 52 லட்சம் ரூபாய் கொடுத்ததாக வேட்பாளரே பொதுவெளியில் பேசியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்பழகனின் இந்தத் திடீர் வாக்குமூலம், அன்றைய காலகட்டத்திலேயே அதிமுகவில் பணப்பரிமாற்றம் எப்படியிருந்தது என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக அமைந்ததோடு, அஇபுதமமுக கட்சி நிர்வாகிகளையே ஒரு நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
