அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்புடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சசிகலா புதிய கட்சி தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தன்னை அவைத்தலைவர் பதவியோடு முடக்க நினைப்பதையும், தேர்தல் வரை பேச்சுவார்த்தையை இழுத்தடித்து தன்னை ஏமாற்றத் திட்டமிட்டிருப்பதையும் உணர்ந்த சசிகலா, தற்போது இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார். வரும் தேர்தலில் குறைந்தது 50 தொகுதிகளில் போட்டியிட்டு எடப்பாடி பழனிசாமியின் வெற்றியைப் பறிப்பதே அவரது தற்போதைய இலக்காக மாறியுள்ளது.
வயதாகிவிட்டதால் சசிகலாவால் இனி அரசியலில் ஒன்றும் செய்ய முடியாது என எடப்பாடி பழனிசாமி நினைப்பதாகவும், அவருக்குச் சரியான பாடம் புகட்ட சசிகலா தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தாலும் பரவாயில்லை, அதன் மூலம் எடப்பாடியின் பிடியிலிருந்து கட்சியைக் மீட்டு, அடுத்த தேர்தலில் அனைவரையும் ஒருங்கிணைக்கலாம் என்பது சசிகலாவின் வியூகமாக உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று அவர் தனது அரசியல் நிலைப்பாட்டை முறைப்படி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
