இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் தமிழ் சினிமாவின் பழம்பெரும் இயக்குனராக திகழ்ந்து வந்தவர். குறிப்பாக அவரது திரைப்படங்கள் பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்திய கதையம்சம் கொண்ட திரைப்படங்களாக பெரும்பாலும் அமையும். தமிழ் சினிமாவின் முக்கிய டிரெண்ட் செட்டராக திகழ்ந்த பாலச்சந்தர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்ற இரண்டு ஜாம்பவான்களை தமிழ் சினிமாவிற்கு அளித்தவர்.
இந்த நிலையில் இயக்குனர் சிகரம் பாலச்சந்தரை ஒரு நடிகர் யார் என்று தெரியாது என கூறியிருக்கிறார். ஆனால் அந்த நடிகருக்கு அடுத்த படத்திலேயே வாய்ப்பும் வழங்கியிருக்கிறார் பாலச்சந்தர்.
அதாவது ஒரு நாள் ஒரு விழாவில் அந்த நடிகர் கலந்துகொண்டிருந்தபோது தனது நண்பர்களுடன் மிக உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தாராம். அந்த நடிகருக்கு முன் வரிசையில் கே.பாலச்சந்தரும் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ்வும் அமர்ந்திருந்தார்களாம்.
அப்போது அந்த நடிகரை அழைத்த சிங்கீதம் சீனிவாச ராவ், பாலச்சந்தரை காண்பித்து, “இவர் யார்ன்னு தெரியுதா?” என அந்த நடிகரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த நடிகர், “யார்ன்னு தெரியலயே” என்று கூறியிருக்கிறார். அந்த நடிகரின் பெயர் சரத்பாபு.
அதன் பின் சில நாட்கள் கழித்து சரத்பாபுவிற்கு பாலச்சந்தரிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. உடனே பாலச்சந்தரை பார்க்க சென்றார் சரத்பாபு. அங்கே பாலச்சந்தர் சரத்பாபுவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு, “நான் நிழல் நிஜமாகிறது என்று ஒரு திரைப்படத்தை இயக்கப்போகிறேன். அதில் நீ ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாய்” என்று சரத்பாபுவிடம் கூறியிருக்கிறார். அவ்வாறுதான் சரத்பாபு தமிழில் அறிமுகமானார் என்று தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இந்த தகவலை தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.