தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி, அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாத ஊதியம் ₹1,000-லிருந்து ₹1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு ₹1,500-லிருந்து ₹2,300 ஆக ஊதியம் உயர்த்தப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்த ஊதிய உயர்வு அறிவிப்பின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் சுமார் 38,000 தூய்மைப் பணியாளர்கள் நேரடியாகப் பயனடைய உள்ளனர். கல்வி நிலையங்களைச் சுத்தமாகப் பராமரிக்கும் இவர்களது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, முதல்வர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
