மும்பை புறநகர் ரயில் மீது கல் வீசுவது போலும், பயணிகளைப் பார்த்து ஆபாச சைகைகள் செய்வது போலும் சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவால், நவி மும்பை திகா பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர் பெரும் சிக்கலில் சிக்கியுள்ளார். ஓடும் ரயில்கள் மீது கற்களை எறிவது பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால், இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து தம்பரம்-தானே ரயில்வே போலீஸாரும் சான்பாடா ரயில்வே பாதுகாப்புப் படையினரும் (RPF) தீவிர விசாரணை நடத்தி அந்த இளைஞரைக் கண்டறிந்து வழக்குப்பதிவு செய்தனர்.
சட்ட நடவடிக்கை பாயும் சூழலை உணர்ந்த அந்த இளைஞர், உடனடியாக கைகளைக் கூப்பியபடி ஒரு மன்னிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், “நான் வெறும் சமூக வலைதள ‘ரீல்ஸ்’ (Reels) வீடியோவுக்காக மட்டுமே அப்படி நடித்தேன்; உண்மையில் ரயில் மீது கல்லை எறியவில்லை, பக்கவாட்டில்தான் வீசினேன். என் தவறை மன்னித்து விடுங்கள், இனிமேல் இதுபோன்று செய்ய மாட்டேன்” என்று உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், அவர் உண்மையில் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தினாரா என்பது குறித்து RPF அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
https://www.instagram.com/reel/DcL5rdGs_BG/?utm_source=ig_embed&ig_rid=AF4Ui1wSsl7ArBn2WlRp0Vp
சமீபகாலமாக இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காக, இளைஞர்கள் ரயில்வே தண்டவாளங்கள் மற்றும் ஓடும் ரயில்கள் அருகில் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான வீடியோக்களை எடுப்பது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சட்டவிரோத மற்றும் ஆபத்தான செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுச் சிறை தண்டனை வரை கிடைக்க வாய்ப்புள்ளது என்றும், பொதுமக்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
