திருப்பூரில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், உணவக நிறுத்தத்தில் ஏற்பட்ட தகராறில் பயணியை ஓட்டுநரும் நடத்துநரும் தாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தென்னிலை அருகே உள்ள ஒரு தனியார் உணவகத்தில் பேருந்து நிறுத்தப்பட்டபோது, அங்கு ஒரு டீ 25 ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. வழக்கமான விலையை விட 10 ரூபாய் கூடுதலாக இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணி ஒருவர், “உங்களுக்கு இலவசமாக டீ, வடை கிடைக்கிறது என்பதற்காகவா, தரமற்ற மற்றும் அதிக விலை விற்கும் கடையில் பேருந்தை நிறுத்துகிறீர்கள்?” என்று நியாயமான கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தக் கேள்வியால் ஆத்திரமடைந்த அரசுப் பேருந்து ஊழியர்கள் இருவரும், சற்றும் எதிர்பாராத வகையில் அந்தப் பயணியைச் சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். தனது மனைவி மற்றும் பச்சிளம் மகளின் கண் முன்னாலேயே அந்த நபர் தாக்கப்பட்டது அங்கிருந்தோரை உறைய வைத்தது. “அடிக்காதீங்க அண்ணா… அடிக்காதீங்க…” என்று அவரது குடும்பத்தினர் கதறி அழுத நிலையிலும், ஊழியர்களின் வன்முறை ஓயவில்லை. இந்தச் சம்பவத்தை மற்ற பயணிகள் தங்கள் செல்போன்களில் பதிவு செய்து இணையத்தில் பகிர, அந்த வீடியோ தற்போது காட்டுத் தீயாய் பரவி வருகிறது.
நெடுஞ்சாலைகளில் இயங்கும் அரசுப் பேருந்துகள், ஓட்டுநர் மற்றும் நடத்துநருக்கு வழங்கப்படும் ‘இலவச சலுகைகளுக்காக’ குறிப்பிட்ட உணவகங்களில் மட்டுமே நிறுத்தப்படுவதாக நீண்டகாலமாகவே குற்றச்சாட்டு உள்ளது. இத்தகைய உணவகங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் குறைவாக இருப்பதோடு, விலையும் பொதுச்சந்தையை விட மிக அதிகமாக வசூலிக்கப்படுகிறது. தட்டிக்கேட்கும் பயணிகளைத் தாக்குவது என்பது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு விடப்பட்ட சவாலாகவே பார்க்கப்படுகிறது.
மக்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பொறுப்பில் இருக்கும் அரசு ஊழியர்களே, தங்களின் சுயநலத்திற்காகப் பயணிகளிடம் வன்முறையில் ஈடுபட்டது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பயணியின் குடும்பத்தினர் கதறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது போக்குவரத்துத் துறை கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தரமற்ற உணவகங்களில் பேருந்துகளை நிறுத்துவதைக் கட்டுப்படுத்த முறையான விதிகளை வகுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
