அதிமுக துணை பொதுச் செயலாளர்களாக எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நியமித்துள்ளார். அண்மையில் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து மூன்றாவது இடத்திற்குச் சென்றது. இதன் காரணமாக, தலைமைக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏ.க்கள் தனி அணியாகச் செயல்பட்டு வந்தனர்.
சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். இதனால் அவர்கள் அதிமுக கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டனர். தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இப்புதிய அறிவிப்பின்படி, தலைமை நிலையச் செயலாளராக வரகூர் அருணாச்சலமும், கொள்கை பரப்பு இணைச் செயலாளர்களாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட நால்வரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தங்கமணி, கே.சி.கருப்பணன், காமராஜ், வீரமணி உள்ளிட்டோர் அமைப்புச் செயலாளர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர். இவர்களுடன் புதுக்கோட்டை, திருச்சி, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கும் புதிய மாவட்டச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
