தமிழகத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், டெண்டர் நடைமுறைகள் மற்றும் கட்டிட வரைபட அனுமதி வழங்கும் செயல்முறைகளில் தமிழக அரசு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகராட்சி கமிஷனர், நகராட்சி நிர்வாக இயக்குநர் மற்றும் பேரூராட்சிகள் இயக்குநருக்கு முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும் அனைத்து பணிகளும் நியாயமானதாகவும், சிக்கனமானதாகவும், பொதுமக்களுக்கு எளிமையானதாகவும் மாறுவதை உறுதி செய்வதே இந்த உத்தரவின் முதன்மை நோக்கமாகும்.
இந்த புதிய உத்தரவின்படி, தமிழ்நாடு டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை சட்டம் (1998) மற்றும் அதற்கான விதிகளை அனைத்து அதிகாரிகளும் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, டெண்டரில் பங்கேற்கும் ஒப்பந்ததாரர்கள் தங்களின் தள ஆய்வு சான்றிதழ், எந்திரங்கள் இருப்பு சான்றிதழ் போன்றவற்றை உள்ளாட்சி அமைப்புகளின் பொறியாளர்களிடம் இருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையை இனி தவிர்க்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இத்தகைய நடைமுறைகள் தகுதியானவர்களுக்கிடையேயான ஆரோக்கியமான போட்டித்தன்மையை பாதிப்பதாக அரசு கருதுகிறது. மேலும், டெண்டர் தொடர்பான அனைத்து ஆவணங்களும் இணையவழியில் மட்டுமே கையாளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டிட வரைபட அனுமதி வழங்கும் நடைமுறைகளிலும் இனி காலக்கெடுவுடன் கூடிய கடுமையான வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் சமர்ப்பிக்கும் கட்டிட அனுமதி விண்ணப்பங்கள், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பரிசீலிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும். இதற்கான கட்டணங்கள் அனைத்தும் முழுமையாக இணையவழியில் (Online) மட்டுமே செலுத்தப்பட வேண்டும். மிக முக்கியமாக, கட்டிட அனுமதி பெற விண்ணப்பிக்கும் பொதுமக்களையோ அல்லது அவர்களது பொறியாளர்களையோ தேவையற்ற காரணங்களுக்காக உள்ளாட்சி அலுவலகங்களுக்கு நேரில் வரவழைக்கக் கூடாது என்றும், அனைத்துத் தகவல் பரிமாற்றங்களும் இணையவழியில் வெளிப்படையாக நடக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மற்றொரு சுற்றறிக்கையில் அதிகாரிகளின் களப்பணி குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து அலுவலர்களும் தினமும் காலை 7 மணிக்கு முன்பாகவே கள ஆய்வில் ஈடுபட வேண்டும், தூய்மைப் பணியாளர்களின் வருகைப் பதிவில் முறைகேடுகள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும். மேலும், பொதுமக்களின் குறைகளுக்கு முன்னுரிமை அளித்து தீர்வு காண்பதுடன், நகரம் முழுவதும் சுவரொட்டிகள் இல்லாத தூய்மையான சூழலை உருவாக்க வேண்டும் மற்றும் தெருநாய்கள் தொல்லையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக பா.ஜ.க-விலிருந்து அதன் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விலகப் போவதாகவும், தனது பிறந்தநாளான இன்று அவர் புதிய அரசியல்…
கடந்த பல வருடங்களாகவே இந்திய இளைஞர்களிடம் ஐடி துறை மிகவும் பிரபலமாகி வருகிறது. இதனால் கல்லூரி மாணவர்கள் பலரும் கம்ப்யூட்டர்…
உலக வெப்பமயமாதல் காரணமாக ஏற்கனவே உலகின் பல நாடுகள் வரலாறு காணாத வெயிலைச் சந்தித்து வருகின்றன. இந்தச் சூழலில், வரும்…
தமிழ்நாடு இந்தியாவிலேயே முற்போக்கான மற்றும் சமூக சீர்திருத்தங்கள் நிறைந்த ஒரு மாநிலமாகத் திகழ்ந்தபோதிலும், காதல் திருமணங்களுக்கு எதிரான சமூகக் கெடுபிடிகளும்…
சமீபகாலமாகவே சாலைகளில் வாகனங்களின் வேகம் அதிகரித்து, விபத்துக்களும் தொடர்கதையாகி வருகின்றன. பைக் மற்றும் கார்களில் செல்பவர்கள் போதிய நிதானமின்றி, அதீத…
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையில், அரசின் செயல்பாடுகள் குறித்தான விமர்சனங்கள்…