தமிழகத்தில் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்களைக் கவரும் வகையில், பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடியான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, பட்டப்படிப்பு முடித்தும் வேலை கிடைக்காத இளைஞர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய மாதம் ₹5,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்குக் கட்டாயம் அரசு அல்லது தனியார் வேலை பெற்றுத்தரப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, தமிழகம் முழுவதும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் உடனடியாக 40,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், ஒட்டுமொத்தமாக 2.50 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இளைஞர்களின் எதிர்காலத்தை மையமாகக் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த வாக்குறுதிகள், வேலைவாய்ப்புச் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
