தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், முந்தைய திமுக அரசின் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் குறித்த எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு வந்த நிலையில், நாளை 15-ஆம் தேதி என்பதால் இந்த மாதம் அந்தத் தொகை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. முந்தைய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் விஜய் நேற்று அதிரடியாக அறிவித்திருப்பதால், இந்த மாதமும் ரூ.1,000 உரிமைத் தொகை தடையின்றி பெண்களுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், தவெக தனது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் எனப் பெரும் வாக்குறுதியை அளித்திருந்தது. தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்தத் தொகையை எப்போது உயர்த்தி வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பும் பெண்கள் மத்தியில் நிலவுகிறது. மாநிலத்தின் தற்போதைய நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும், அதன் அடிப்படையில் நிதி நிர்வாகத்தைச் சீரமைத்த பிறகு, வாக்குறுதி அளித்தபடி ரூ.2,500 வழங்கும் புதிய திட்டத்தை அரசு முறைப்படி அமல்படுத்தக்கூடும் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
