நேபாளத்தின் சித்வான் பகுதியில் உள்ள சௌராஹா தெருக்களில் இரண்டு ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காடுகளுக்குள் சாதாரணமாக நடக்கும் இத்தகைய மோதல்கள், மக்கள் நடமாட்டம் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் நிகழ்ந்தது அங்கிருந்தோரை பீதியில் ஆழ்த்தியது.
உணவு அல்லது தங்கள் எல்லையைத் தீர்மானிப்பதில் ஏற்பட்ட போட்டியே இந்த மோதலுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த இரண்டு பிரம்மாண்டமான காண்டாமிருகங்களும் ஆக்ரோஷமாக ஒன்றையொன்று முட்டித் தள்ளியதைக் கண்டு, சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் அலறியடித்துக்கொண்டு ஓடினர். அங்கிருந்த சிலர் இந்த அரிய காட்சியைத் தங்கள் மொபைல் போன்களில் படம்பிடித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், காண்டாமிருகங்களை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்தனர். வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்து வருவது, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான மோதலைச் சுட்டிக்காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த மோதலில் பொதுமக்களுக்குப் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை.
