தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தேர்தலை கருத்தில் கொண்டு திமுக பல்வேறு புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட தயாராகி வருகின்றது. அதன்படி மகளிர் உரிமைத்தொகை தொடர்பான வாக்குறுதி தான் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு கை கொடுத்தது. எனவே 2023 ஆம் ஆண்டு முதல் சுமார் 1.15 கோடி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும், கூடுதல் பயனாளிகளை இணைக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக பலரும் புதிதாக விண்ணப்பித்து வந்த நிலையில் சுமார் 29 லட்சம் பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனை செய்யப்பட்டு வரும் நிலையில் டிசம்பர் 12ஆம் தேதி முதல் 29 லட்சம் விண்ணப்பங்களில் 15 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஐந்தாயிரம் ரூபாய் பரிசு தொகை வழங்க உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த 2023 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் குடும்ப அட்டைகளுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் பொங்கல் பரிசு தொகப்பும் வழங்கப்பட்டது. ஆனால் நிதி நெருக்கடி காரணமாக 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது ரொக்க பணம் வழங்கப்படவில்லை. இப்படியான நிலையில் 2026 தேர்தலை கருத்தில் கொண்டு வருகின்ற பொங்கல் பண்டிகையில் மக்கள் சிறப்பாக கொண்டாடும் விதமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 27 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றால் 12,000 கோடி அளவுக்கு நிதி ஒதுக்க வேண்டும். இது தொடர்பாக முதல்வர் ஆலோசித்து வரும் நிலையில் விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
