நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த மாதம் ரவி மோகன் செய்தியாளர்களைச் சந்தித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.
அவரது இந்தச் செய்தியாளர் சந்திப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்திருந்த உத்தரவை மீறும் வகையில், நீதிமன்ற வழிகாட்டுதல்களைப் பின்பற்றாமல் ஊடகங்களில் பேசியதற்காக நடிகர் ரவி மோகன் மீது விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி ஊடகங்களில் பேசியதற்காக நடிகர் ரவி மோகன் தற்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். தனது செயலுக்குப் பொதுமன்னிப்பு கோரியுள்ள அவர், தனது கருத்துகளால் மனவேதனை அடைந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
