பாமக-வில் உச்சக்கட்ட மோதல்… மகனுக்கு செக் வைத்த தந்தை… ராமதாஸ் தொடர்ந்த அதிரடி வழக்கால் அன்புமணி செம ஷாக்…!

By Nanthini on சித்திரை 17, 2026

Spread the love

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்டுள்ள அரசியல் மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. பாமக இரு அணிகளாகப் பிரிந்து செயல்படும் நிலையில், அன்புமணி தலைமையிலான அணி அதிமுக அங்கம் வகிக்கும் என்.டி.ஏ. கூட்டணியில் 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ராமதாஸ் மற்றும் சசிகலா ஆகியோர் தனி அணியாகத் தேர்தலைச் சந்திக்கின்றனர். இந்தச் சூழலில், தனது புகைப்படத்தை அன்புமணி தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என ராமதாஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை 13-வது உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தாக்கல் செய்துள்ள புதிய மனுவில், அன்புமணி ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்றும், அவர் சட்டவிரோதமாகத் தலைவராக நீடித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமக்கும் அன்புமணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதால், தேர்தல் பிரச்சாரங்களின் போது தனது உருவப்படத்தை அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என்று அவர் அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

   

ஏற்கனவே பாமகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தைப் பயன்படுத்த அன்புமணிக்குத் தடை விதிக்கக் கோரி ராமதாஸ் தொடர்ந்த இடைக்கால மனுக்களைச் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தன. அந்தப் பின்னடைவுக்குப் பிறகு, தற்போது தனது தனிப்பட்ட பிம்பம் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக ராமதாஸ் இந்த புதிய சட்டப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

   

இந்த வழக்கை விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் கேட்டு அன்புமணி ராமதாஸ் தரப்பு வேட்பாளர்கள் 18 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தந்தை – மகன் இடையிலான இந்தப் சட்டப் போராட்டம் பாமக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை வேட்பாளர்களின் பிரச்சார யுக்தியில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.