பாமக நிறுவனர் ராமதாஸ் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், தனது மகன் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். தான் வளர்த்த கட்சி தற்போது ஒரு குடும்பத்தின் சொத்தாக மாறிவிட்டதாகவும், உண்மையாக உழைத்த நிர்வாகிகளை ஓரம் கட்டிவிட்டு அன்புமணி தனது சுயநல சாம்ராஜ்யத்தை உருவாக்கி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தர்மபுரியில் தனது மனைவியை வேட்பாளராக நிறுத்தி அரசியலை ஒரு வியாபாரமாக அன்புமணி மாற்றிவிட்டதாகக் கூறிய ராமதாஸ், மாம்பழம் சின்னத்தில் இப்போது துரோகம் எனும் விஷம் கலந்துள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களை அவரது மகன் ஸ்டாலின் இறுதிவரை கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டதைப் பாராட்டிய ராமதாஸ், தனது மகன் தான் எப்போது இறப்போம் என்று காத்திருப்பதாகக் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். அன்புமணி போட்டியிடும் 18 தொகுதிகளிலும் அவரது அணியினர் படுதோல்வி அடைய வேண்டும் என்றும், இது எந்த மகனும் தன் தந்தைக்குத் துரோகம் செய்யக் கூடாது என்பதற்கான பாடமாக அமைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். தனது ரத்தமே தனக்கு விஷமாக மாறினாலும், தொண்டர்கள் தனக்கு மருந்தாக இருந்து இந்தத் துரோகத்தை வீழ்த்த வேண்டும் என்று அவர் தனது கடிதத்தில் உருக்கமாக வேண்டியுள்ளார்.
