என்னது அந்த வேடத்துக்கு ரஜினியா… உங்களுக்கு என்ன பைத்தியமா?- இயக்குனர் மகேந்திரனிடம் கோபப்பட்ட தயாரிப்பாளர்!

By vinoth on மார்ச் 23, 2024

Spread the love

என்னது அந்த வேடத்துக்கு ரஜினியா.. உங்களுக்கு என்ன பைத்தியமா..? இயக்குனர் மகேந்திரனிடம் கோபப்பட்ட தயாரிப்பாளர்.. தமிழ் சினிமாவுக்கு எம் ஜி ஆரால் அழைத்து வரப்பட்டவர் மகேந்திரன். தங்கள் கல்லூரி விழாவில் எம் ஜி ஆர் முன்பு தமிழ் சினிமாவைக் காட்டமாக விமர்சித்து அவரின் கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் சென்னை வந்து துக்ளக் பத்திரிக்கையில் பணியாற்றிய போது அவரை அடையாளம் கண்டுகொண்டு அவரை சினிமாவுக்கு அழைத்து வந்து கதை வசனம் எழுத வைத்தார்.

தனது கனவுப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு அவரை திரைக்கதை எழுத பணித்தார். ஆனால் மகேந்திரனால் அதை எழுதி முடிக்க முடியவில்லை. ஆனாலும் அவர் மேல் வருத்தப்படாத எம் ஜி ஆர் அவருக்கு பல படங்களில் கதை வசனம் எழுத பரிந்துரைத்துள்ளார்.

   

தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை வசனம் எழுதிய மகேந்திரன் முதல் முதலாக முள்ளும் மலரும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். உமா சந்திரனனின் முள்ளும் மலரும் நாவலை திரைக்கதையாக்கி தயாரிப்பாளர் வேணு செட்டியாரிடம் கொடுத்துள்ளார். திரைக்கதை அவருக்குப் பிடிக்கவே படத்தைத் தொடங்கலாம் எனக் கூறியுள்ளார்.

   

ஆனால் படத்தின் முக்கியக் கதாபாத்திரமான அந்த காளி கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைக்கப் போகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கு மகேந்திரனோ ரஜினிகாந்த் என பதிலளித்துள்ளார். அதைக் கேட்டு ஷாக் ஆன வேணு செட்டியார் “உங்களுக்கு என்ன பைத்தியமா? வில்லனாக நடித்து வரும் அவரை எப்படி அந்த கதாபாத்திரத்தில் ரசிகர்கள் ரசிப்பார்கள். அதுமட்டுமில்லாமல் அவர் கருப்பாக வேறு இருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.

 

ஆனால் மகேந்திரனோ “எனக்கு ரஜினி நடித்தால்தான் அந்த படம் சரியாக வரும் என்று தோன்றுகிறது. ரஜினி வேண்டாம் என்றால் எனக்கு இந்த படமே வேண்டாம்” என உறுதியாக சொல்லிவிட்டாராம். அதன் பிறகுதான் தயாரிப்பாளர் மகேந்திரனின் முடிவுக்கு சம்மதம் தெரிவித்து அந்த படத்தைத் தயாரித்திருக்கிறார். ஆனால் படம் ரிலீஸான பின்னர் ரஜினியை தவிர அந்த கதாபாத்திரத்தில் வேறு யாராலும் சிறப்பாக நடித்திருக்க முடியாது என விமர்சனங்கள் வந்துள்ளன.