CINEMA
என் மகள் அப்டி சொல்லவே இல்ல.. சொல்லிருந்தா அது அவுங்க.. விஸ்வரூபம் எடுத்த சங்கி விவகாரம்.. விளக்கம் கொடுத்த ரஜினி..
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ ரஜினி சங்கியா இல்லையா என்பது தான். ஆரம்பம் முதலே பாஜகவின் கொள்கைகள் மற்றும் பிரதமர் மோடிக்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்து வருகிறார். பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களில் பெரும்பான்மையானோர் இந்துக்கள் என்பதால், அவர்களை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சங்கி என அழைத்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினிகாந்தையும் பலரும் சங்கி என அழைத்து வந்தனர்.
அவர் அரசியலுக்கு வந்தப் பிறகு ஒருவேளை பாஜகவுடன் தான் கூட்டணி வைப்பாரோ என்ற சந்தேகம் இருந்தது. அதன் பிறகு அரசியலுக்கு வரப்போவது இல்லை என அறிவித்த பிறகு, ஒருவேளை தனது ஆதரவு பாஜகவுக்குத் தான் என கூறிவிடுவாரோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் இன்று வரையிலும் தன்னை ஒரு அரசியல் கட்சிக்குள் அடக்கிக் கொள்ளாமல் இருந்து வரும் அவரது செய்கைகள் மற்றும் கருத்துகளை பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பது போலவே இருந்து வருகிறது. குறிப்பாக அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கின் போது கூட, அதில் கலந்து கொண்டதற்காக ரஜினிகாந்த் விமர்சிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தான் கடந்த 27-ம் தேதி லால் சலாம் படத்தின் இசை வெளியீடு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அப்படத்தின் இயக்குநரும், ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா, தனது தந்தை ஒரு சங்கி அல்ல என கூறினார். “அப்பாவை சங்கின்னு சொல்றாங்க. அது எனக்குப் பிடிக்கவில்லை. ரஜினிகாந்த் சங்கி கிடையாது. அப்படி சங்கியாக இருந்தால் அவர், லால் சலாம் போன்ற படத்தில் இருந்திருக்க மாட்டார். படத்தைப் பார்த்தால் அது புரியும். ஒரு சங்கியால் இந்தப் படத்தை பண்ண முடியாது. ஒரு மனிதநேயவாதியால் மட்டும் தான் இது போன்ற ஒரு கதையில் நடிக்க முடியும்” எனக் கூறியிருந்தார் ஐஸ்வர்யா.
இவரது இந்தப் பேச்சு மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், “சங்கி என்பது கெட்ட வார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை. அப்பா ஒரு ஆன்மீகவாதி, எல்லா மதத்தையும் விரும்பும் ஒரு நபர், அவரை ஏன் அப்படி சொல்கிறார்கள்” என்பது அவருடைய பார்வை எனக் கூறியிருக்கிறார். அத்தோடு லால் சலாம் திரைப்படம் நன்றாக வந்திருப்பதாகவும், மதநல்லிணக்கத்தை இப்படம் பேசுவதாகவும் கூறிவிட்டு சென்றார் ரஜினிகாந்த்.