இன்று ரஜினிகாந்த் தனது 73வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். ஆனால் அவருக்கு வாழ்த்து சொல்ல வந்த ரசிகர்களை அவர் சந்திக்க வரவில்லை என்று கூறப்படுகிறது. வழக்கமாக தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் வீட்டை விட்டு வெளிவரும் ரஜினி, ரசிகர்களை சந்தித்து வாழ்த்துகள் சொல்வார். ஆனால் இப்போது மட்டுமல்ல, கடந்த பல ஆண்டுகளாகவே இப்படி பிறந்த நாளன்று ரசிகர்களை சந்திப்பதில் ரஜினி ஆர்வம் காட்டாமல் தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சினிமா விமர்சகர் செய்யாறு பாலு நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, ரஜினிகாந்த் பிறந்த நாளன்று பெரும்பாலும் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் இருக்க மாட்டார். பெரும்பாலும் இமயமலைக்கு சென்றுவிடுவார். அல்லது வெளியூர்களுக்கு சென்றுவிட்டார். வெளியூர்களில் ஷூட்டிங் இருந்தால் கலந்துக்கொள்வார். அந்த நாளில் வீட்டில் இருப்பதை தவிர்த்து விடுவார்.இதுகுறித்து முன்னமே அவரது ஆபிசில் இருந்து இதுபற்றிய அறிக்கை வந்துவிடும். நாளை நான் வெளியூரில் இருப்பதால், அல்லது இமயமலையில் இருப்பதால், ரசிகர்கள் யாரும் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல வர வேண்டாம் என்றே அறிக்கையில் கூறிவிடுவது வழக்கமாக இருந்தது.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்று ரஜினியே ஒருமுறை கூறியிருக்கிறார். அதாவது 1980களில் ஒருமுறை இதுபோன்று ரஜினி பிறந்த நாள் விழா நடந்துள்ளது. அப்போது ரஜினியை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வந்துள்ளனர். அவர்கள் எல்லாம் திரும்பி செல்லும்போது, அதில் 3 ரசிகர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அந்த ரசிகர்களின் வீடுகளுக்கு துக்கம் விசாரிக்க சென்ற ரஜினியிடம் அந்த தாய்மார்கள் கோபமாக பேசியுள்ளனர். அந்த வார்த்தைகளை கேட்ட பிறகு மனம் வெறுத்துப்போன ரஜினிகாந்த், அதன்பிறகு ரசிகர்களுடன் தனது பிறந்த நாளை கொண்டாடவும் விரும்புவதில்லை. அந்த நாளில் ரசிகர்கள் சென்னை வரவும் அனுமதிப்பதில்லை. அதற்காக அவர் இமயமலைக்கோ, வெளியூர்களுக்கோ சென்றுவிடுகிறார் என கூறியிருக்கிறார் செய்யாறு பாலு.