CINEMA
‘வருஷத்துக்கு 100 இலவச திருமணங்களை நடத்தி வைப்பேன்’.. சொன்னதை செய்யாமல் ஏமாற்றினாரா ரஜினி..?
நடிகர் ரஜினிகாந்த், தமிழக மக்களின் அபரிமிதமான அன்பை பெற்றவர். அதனால் அவர் நடித்த படங்களை இப்போதும் வெற்றிப்படங்களாக ரசிகர்கள் மாற்றி வருகின்றனர். என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா, என்று பாடல் வரிகளுக்கு வாயசைத்த ரஜினி, இதுவரை தமிழக மக்களுக்காக என்ன செய்தார் என்று கேட்டால், தனிப்பட்ட முறையில் எதுவுமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவராக, பொதுமக்களை சந்தித்து எந்தவிதமான உதவிகளையும் செய்ததில்லை. அதே நேரத்தில், சொன்னதை செய்வேன், செய்வதை சொல்வேன் என்ற பஞ்ச் டயலாக் பேசிய ரஜினி, 1989ல் சொன்னதையும் நிறைவேற்றாமல் ரசிகர்களை, தமிழக மக்களை ஏமாற்றியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், படங்களில் நடித்து வந்த பெரிய வருமானத்தை வைத்து, ராகவேந்திரா திருமண மண்டபத்தை சொந்தமாக கட்டினார். அந்த மண்டபத்தின் திறப்பு விழா, கடந்த 1989ம் ஆண்டில் நடந்தது. அப்போது பேசிய ரஜினி, தமிழக மக்களுக்கு ஏதாவது செய்யலாம் என்று நோக்கத்தில் தான் இந்த ராகவேந்திரா மண்டபத்தை கட்டியுள்ளேன். சென்னையில் மட்டுமின்றி கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களிலும் இதுபோன்ற மண்டபங்களை கட்டுவேன். இதில் வரும் வருமானத்தை வைத்து ஆண்டுக்கு 100 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைப்பேன் என்று பேசி இருக்கிறார்.
ஆனால் அப்படி எல்லாம் எந்தவிதமான இலவச திருமணத்தையும் ரஜினிகாந்த் நடித்து வைக்கவில்லை. ராகவேந்திரா திருமண மண்டப திறப்பு விழாவில் சொன்னது போல திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களில் ரஜினிகாந்த் திருமண மண்டபங்கள் எதுவும் கட்டவும் இல்லை. ராகவேந்திரா மண்டபத்தில் கூட இலவசமாக ஏழை மக்கள் திருமணம் செய்துக்கொள்ளவும் ரஜினி அனுமதி வழங்கவும் இல்லை. ஆனால் இவரது ரசிகராக உள்ள, தனது குரு ரஜினிதான் என கூறிவரும் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் சக்சஸ் மீட்டில் பேசும் போது, நான் புதிதாக பெரிய திருமண மண்டபம் ஒன்றை கட்ட உள்ளேன். அதை ஏழை எளிய மக்கள் தங்களது திருமணங்களை இலவசமாக செய்துக்கொள்ளலாம். அங்கு மண்டபத்துக்கு வாடகை உள்ளிட்ட எந்தவிதமாக கட்டணங்களும் செலுத்த வேண்டியதில்லை என்று அறிவித்திருக்கிறார். 1989ல் ரஜினி பேசிய அந்த செய்தி அடங்கிய பேப்பர் கட்டிங் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனந்த விகடன் வெளியிட்ட காலப்பெட்டகம் புத்தகம் வாசித்தபோது கண்ணில்பட்ட கட்டுரை. 1989 ல் ராகவேந்திரா கல்யாணமண்டப திறப்புவிழாவில் ரஜினியின் பேச்சு…@rajinikanth pic.twitter.com/kzHxDdPFO4
— Valaipechu J Bismi (@jbismi_offl) November 27, 2023