தமிழ் சினிமாவில் கமர்ஷியல் சினிமாவின் உச்சமாக அமைந்தது ரஜினிகாந்த் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாட்ஷா திரைப்படம். 90 களில் ரஜினியின் மார்க்கெட் புதிய உச்சத்தைத் தொட்டது. அதில் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக அமைந்தது பாட்ஷா திரைப்படம். அந்த படத்தின் வெற்றியால் அதே திரைக்கதை பார்மட்டில் 10க்கும் மேற்பட்ட படங்கள் வெவ்வேறு நடிகர்களை வைத்து உருவாகின.
இந்த படத்தைத் தயாரித்தது சத்யா மூவிஸ் ஆர் எம் வீரப்பன். இந்த படம் பற்றி ஒரு முறை பேசும் போது இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பலரும் அறியாத ஒரு தகவலைப் பகிர்ந்தார். அதில் “பாட்ஷாவுக்கு முன்பு வரை ரஜினி சாருக்கு தெலுங்கில் மார்க்கெட்டே இல்லை. அவர் படங்கள் தெலுங்கில் ஓடவே ஓடாது. அதனால் பாட்ஷா படத்தை குறைவான விலைக்குதான் விற்றார்கள். ஆனால் படம் சூப்பர் ஹிட்டானது. அதன் பிறகுதான் ரஜினி சாருக்கு நிலையான தெலுங்கு மார்க்கெட் உருவானது. எல்லா படங்களும் தெலுங்கில் டப் செய்யப்பட்டன” எனக் கூறியிருந்தார்.
பாட்ஷாவுக்கு பிறகு ரஜினி சினிமாவில் மட்டும் இல்லாமல், அரசியல் களத்திலும் சூப்பர் ஸ்டார் ஆனார். அப்போது நடந்த ஒரு தேர்தலில் ரஜினியின் ஆதரவால்தான் திமுக கூட்டணி வெற்றி பெற்றதாகக் கூட சொல்லப்பட்டது. அந்த அளவுக்கு தாக்கம் ஏற்படுத்திய பாட்ஷா படத்தில் பல குறைகள் உள்ளன. ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ள விடாத அளவுக்கு ரஜினியின் மாஸும் பரபரப்பான திரைக்கதையும் அமைந்தது.

இந்த படத்தில் ரஜினியின் பாட்ஷா கதாபாத்திரத்தை இன்றளவும் நினைவு கூறத்தக்க ஒன்றாக மாற்றியது என்றால் அது ரகுவரனின் மார்க் ஆண்டனிதான். அந்தளவுக்கு தன்னுடைய மிரட்டலான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். படம் வெளியாகி ரஜினி வாழ்க்கையில் அதுவரை இல்லாத கமர்ஷியல் வெற்றியைப் பெற்றது. அந்த படத்தின் வெற்றியால் ரஜினி தமிழகத்தின் அரசியலில் தாக்கம் செலுத்தும் விதமாக அமைந்தது.
அந்த படத்தின் வெற்றியைப் பார்த்து மிரண்ட ரஜினி, இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் “இனிமேல் நாம் சில ஆண்டுகளுக்கு படம் பண்ன வேண்டாம். ஏனென்றால் பாட்ஷா உச்சம் தொட்டுவிட்டது. அதை நம்மால் இனிமேல் தோற்கடிக்கவே முடியாது. அதனால் நாம் சில ஆண்டுகள் இடைவெளி எடுத்துக் கொள்ளலாம் என்றார். அதனால்தான் நாங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இணைந்து படம் பண்ணவில்லை” எனக் கூறியுள்ளார்.
