CINEMA
அப்போ விஜய்க்கு 13 வயசு இருக்கும். அப்பவே அவருக்கு நான் அறிவுரை சொல்லி அனுப்பினேன் – லால் சலாம் விழாவில் ரஜினி பரபரப்பு பேச்சு!
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், லைக்கா புரடக்சன் தயாரிப்பில் வரும் பிப்ரவரி 9ம் தேதி, லால் சலாம் படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். கெஸ்ட் அப்பியரன்ஸ் என்றாலும், இந்த மொத்தம் 45 நிமிடங்கள் ரஜினி நடித்திருக்கிறார். இந்த படத்தின் ஆடியோ லான்ச் விழா, நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியது இப்போது வைரலாகி வருகிறது.
அந்த விழாவில் ரஜினி பேசியதாவது, ஜெயிலர் பட விழாவின் போது நான் சொன்ன காக்கா கழுகு கதை, சமூக ஊடகங்களில் தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டு விட்டது. நான் விஜயை நினைத்து அப்படி பேசவில்லை. விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன். தர்மத்தின் தலைவன் படப்பிடிப்பில் இருந்த போது எஸ்ஏ சந்திரசேகர், விஜயை அழைத்து வந்து என்னிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது விஜய்க்கு 13 வயது இருக்கும். இப்பவே நடிக்கணுமுன்னு ஆசைப்படறான். நீங்க கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க. படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் நடிக்கலாமுன்னு சொல்லுங்க, என்றார்.
நானும் விஜயிடம், நல்லா படிக்கணும்பா, என்று அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தேன். அப்படி இருக்கையில் விஜயை நான் போட்டியாக நினைப்பதோ, அல்லது என்னை விஜய் போட்டியாக நினைப்பதோ இருவருக்குமே மரியாதை இல்லை. கவுரவமும் இல்லை. அதனால், ரஜினி படத்துக்கு போட்டி ரஜினிதான். அதுபோல் விஜய் படத்துக்கு போட்டி விஜய்தான்.
அதனால் தயவு செய்து ரசிகர்கள் இனிமேல் இந்த விஷயத்துக்கா சண்டை போட்டுக்கொள்ள கூடாது என்று அறிவுரை வழங்கிப் பேசியிருக்கிறார். விஜய்க்கு 13 வயசு இருக்கும்போதே நன்றாக படிக்க வேண்டும் என்று அட்வைஸ் பண்ணிய ரஜினியை அவர் போட்டியாக நினைக்க வாய்ப்பில்லை. அதே போல் தனக்கும் விஜய் போட்டியில்லை என, கழுகு காக்கா விவகாரத்துக்கு இதன்மூலம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.