திக் திக் நிமிடங்கள்!… இடிந்து விழுந்த ரயில்வே மேம்பாலம்… நூலிழையில் உயிர் தப்பிய தொழிலாளர்கள்… விசாகப்பட்டினத்தில் பயங்கரம்…!!!

By Muthu Mani on சித்திரை 26, 2026

Spread the love

விசாகப்பட்டினம் மாவட்டம் கஜுவாக்கா அருகே உள்ள துங்கலம் பகுதியில், கட்டுமானத்தில் இருந்த ரயில்வே மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. மூன்றாவது மற்றும் நான்காவது தூண்களுக்கு இடையே காற்றோட்டக் குழாய் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், எதிர்பாராதவிதமாக பாலத்தின் ஒரு பகுதி இடிந்து சரிந்தது. இந்த விபத்தின்போது அங்கு பணியில் இருந்த சுமார் 10 தொழிலாளர்களில், ஏழு பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தில் பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதற்கு அதிர்ஷ்டவசமான சில காரணங்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. விபத்து நேரிட்ட சமயம் மதிய உணவு இடைவேளை என்பதால் பெரும்பாலான தொழிலாளர்கள் வெளியே சென்றிருந்தனர். மேலும், அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்தை விட குறைவான பணியாளர்களே வேலைக்கு வந்திருந்தனர். இல்லையெனில், விபத்தின் தீவிரம் மற்றும் பாதிப்புகள் இன்னும் மோசமாக இருந்திருக்கும் என நேரில் பார்த்தவர்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.

   

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும் மீட்புக் குழுவினரும், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேம்பாலத்தின் அடியில் சென்ற வாகன ஓட்டிகள் யாரேனும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனரா என்பதை அறிய தேடுதல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கட்டுமானக் குறைபாடுகள் ஏதேனும் இந்த விபத்திற்கு காரணமா என்பது குறித்து அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.