பீகாரில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வாக்காளர் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் 27ஆம் தேதி தர்பங்கா மாவட்டத்தில் இவரது பேரணி நடைபெற்றது. அப்போது சாலை ஓரத்தில் உணவகம் நடத்தி வந்த சுபம் என்பவரிடம் பல்சர் 220 மோட்டார் பைக்கை போலீசார் வாங்கி உள்ளனர். ஆனால் இன்றுவரை திருப்பி கொடுக்கவில்லை. சுபம் எங்கு தேடியும் பைக் கிடைக்காததால், ஊடகத்தினருடன் பேசி உள்ளார்.
கடந்த 31ஆம் தேதி சுபம் என்பவரை டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் தொலைபேசி மூலமாக அழைத்து பாட்னாவிற்கு வருமாறு கூறியிருந்தார். நேற்று முன்தினம் யாத்திரை நிறைவடைந்த நிலையில், அந்த விழாவிலேயே சுபம் என்பவருக்கு புதிய பல்சர் 220 பைக்கை ராகுல் காந்தி பரிசாக வழங்கினார்.
