புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் புகழேந்தி கோவையில் அளித்த பேட்டியில், மதவாத சக்திகளான ஆர்எஸ்எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகள் தமிழகத்திற்குள் நுழைவதைத் தடுக்கவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததாகப் புகழேந்தி கூறினார். பிஜேபியின் முக்கிய இலக்கே அதிமுகவை அழிப்பதுதான் என்றும், அதை எடப்பாடி பழனிசாமியை வைத்தே அவர்கள் சாதித்துவிட்டார்கள் என்றும் அவர் சாடினார். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது போயஸ் கார்டன் வாசலில் நின்ற பிஜேபியினர், இன்று எடப்பாடியைத் டெல்லிக்கு வரவழைத்துப் பிச்சை எடுக்க வைப்பதாகக் கடுமையாக விமர்சித்தார். எடப்பாடி பழனிசாமி போன்ற ஒரு துரோகியை அரசியலில் பார்க்க முடியாது என்றும், அவர் அரசியலில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டியவர் என்றும் ஆவேசப்பட்டார்.
சசிகலா புதிதாகத் தொடங்கியுள்ள கட்சி குறித்துப் பேசிய புகழேந்தி, அது அவருடைய சொந்தக் கட்சி அல்ல என்றும், யாரிடமோ இருந்து வாடகைக்கு வாங்கப்பட்ட கட்சியாக இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுப்பினார். டிடிவி தினகரன் மீதுள்ள கோபத்தின் காரணமாகவே சசிகலா இவ்வாறு செயல்படுகிறாரோ என்று தோன்றுகிறது எனக் குறிப்பிட்ட அவர், தேர்தலில் போட்டியிட்டால் டிடிவி தினகரனுக்கு 300 வாக்குகள் கூடக் கிடைக்காது என்று எள்ளி நகையாடினார். அதிமுக இப்போது எடப்பாடி பழனிசாமியின் கையில் இல்லை என்றும், அவர் எவ்வளவுதான் தேடி வந்து அழைத்தாலும் தான் மீண்டும் அங்கு செல்லப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறினார்.
