தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்க இன்னும் 10 இடங்கள் தேவைப்படும் நிலையில் மெரினா கடற்கரையில் போராட்ட மேகங்கள் சூழ்ந்துள்ளன. தங்கள் தலைவர் விஜய்யை முதலமைச்சராகப் பொறுப்பேற்க வலியுறுத்தி, ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போன்ற ஒரு மாபெரும் அறவழிப் போராட்டத்தை மெரினாவில் முன்னெடுக்க அக்கட்சியின் தொண்டர்கள் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் இது குறித்துத் தீவிரமாகப் பதிவிட்டு வருவதைத் தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரை முழுவதும் காவல்துறை தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மெரினாவின் அனைத்து நுழைவு வாயில்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதோடு, கூட்டமாகத் திரளுவதைத் தவிர்க்கவும் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
