சினிமா படம் எடுப்பது என்பது அன்றைய காலகட்டத்தில் யானையைக் கட்டி வைத்து சோறு போடும் கதைதான். டெக்னாலஜி எதுவும் வளராத காலகட்டங்களில் காட்சி நன்றாக வரவேண்டும் என்பதற்காக பல லட்சங்கள் செலவழித்து வெளிநாடுகளில் ஷுட்டிங், பிரம்மாண்ட செட் என்றெல்லாம் படங்களைத் தயாரித்து வந்தனர். ஆனால் இன்றோ கிரீன்மேட் தொழில்நுட்பம் வந்தபிறகு படங்களை இயக்குவது வெகு சுலபமாகிவிட்டது. பொருளாதார ரீதியாக பெரும் பொருட்செலவை இப்போதுள்ள தொழில்நுட்பம் வெகுவாகக் குறைக்கிறது.
ஆனால் அன்றைய காலகட்டத்தில் ஒரு காட்சிக்காக 100 யானைகளையே களம் இறக்கி அக்காட்சியை எடுத்து அசர வைத்திருப்பார் எஸ்.எஸ்.வாசன். சந்திரலேகா போன்ற பிரம்மாண்டப் படங்களை தமிழ்சினிமாவிற்குக் கொடுத்த எஸ்.எஸ்.வாசன் அதன்பின் ஔவையார் படத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தார். அதன்படி ஷுட்டிங் தொடங்கி நடைபெற்று வந்த வேளையில் ஒளைவயார் படத்திலும் தனது பிரம்மாண்டத்தைக் காட்ட விரும்பினார் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன்.
ஒளவையார் கதையில் அப்படி என்ன பிரம்மாணடம் காண்பிக்க முடியும் என இயக்குனர், கொத்தமங்கலம் சுப்பு உள்ளிட்ட எழுத்தாளர் குழுவினர் பலரும் மண்டையை போட்டு குழப்ப கடைசியில் அதற்கேற்றார் போல கதையில் ஒரு காட்சியும் இருந்தது. திமிர் பிடித்த மூன்று அரசர்கள் ஒளவையாருக்கு தொல்லை கொடுக்க அவர்களை சமாளிப்பதற்கு ஒளவையார் கோவிலுக்கு சென்று விநாயகரிடம் ஒரு கும்பிடு போட்டு கோரிக்கை வைக்கும் ஒரு காட்சி இருந்தது. அதை கொஞ்சம் டெவலப் செய்து ஒளவையாரின் கோரிக்கையை ஏற்கும் விநாயகர் 100 யானைக் கூட்டத்தை அனுப்பி அந்த மன்னர்களில் ஒருவரது கோட்டையை இடிக்க அனுப்பி வைப்பது தான் அந்தக் காட்சி.
ஷூட்டிங் ஸ்பாட்டில் ஹீரோவை செருப்பால் நையப் புடைத்த சோனியா அகர்வால்.. லீக் ஆன உண்மை
இந்த காட்சிக்குத் தேவையான 100 யானையை வரவழைத்துக் காட்சி படுத்தி விட்டால் அதை விட பிரம்மாண்டம் வேறென்ன இருக்க முடியும் என வாசன் முடிவெடுத்து காரியத்தில் இறங்கினார். இதற்கு 100 யானைகளை தேடி ஜெமினி ஸ்டூடியோ குழு அங்குமிங்குமாக அலைந்த போது ஒரு தகவல் அந்தக் குழுவுக்கு கிடைக்க உடனே துறைமுகம் விரைந்தது, கர்நாடகாவின் கூர்க்கில் சும்மா திரிந்து கிடந்த 100 யானைகளை சென்னை துறைமுகம் வழியாக கப்பலில் அந்தமானுக்கு யானைகள் கூட்டமாக கொண்டு செல்லப்படுவதாக வந்த செய்திதான் அது.
இப்படி அந்தமானுக்கு செல்லும் யானைகளை படப்பிடிப்புக்கு கொண்டு வருவது என்பது மலையைக் கட்டி கேசத்தில் இழுக்கும் விஷயம். ஆனால் வாசனால் அது சாத்தியப்பட்டது. பல முயற்சிகள் செய்து 100 யானைகளை ஸ்டூடியோவுக்கு கொண்டு வந்து கோட்டையை செட் போட்டு அதை யானைகள் மோதி உடைப்பது போல பத்து நாட்கள் தொடர்ந்து படம் பிடித்தார் .
அந்த 100 யானையை பத்து நாட்கள் பராமரித்த செலவில் மட்டும் இன்று மூன்று படங்கள் எடுத்துவிடலாம். ஏறக்குறைய படம் முடிவடைந்த நிலையில் வாசன் யோசித்து மீண்டும் கொத்தமங்கலம் சுப்புவிடம் மேலும் சில காட்சிகளை சேர்க்க சொல்ல வியந்து போயிருக்கிறார் இயக்குநர்.
அதன்படி பண்டைத் தமிழ் மன்னன் பாரி ஒளவையாருக்கு பிரம்மாண்ட வரவேற்பை அளிப்பதாக எழுதப்பட்டு ரூ. 1.5 லட்சம் செலவில் ஒரு முழு தெரு செட் போடப்பட்டது. 10,000 இளைய கலைஞர்கள் மற்றும் பல வகையான நாட்டுப்புற நடனங்கள் அந்த ஊர்வலத்தில் சேர்க்கப்பட்டன. இந்த பிரம்மாண்டமான காட்சி திரைப்படத்தை உயிர்ப்பித்தது.
இதுபோன்ற சாகசங்கள் பலவற்றை அவர் வாழ்க்கை முழுக்க செய்தார். இதனால்தான் இன்றும் அவர் சரித்திரத்தில் இடம்பிடித்து போற்றப்பட்டு வருகிறார் எஸ்.எஸ். வாசன்.