நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள களிமேடு பகுதியில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த திலக்நாயக் மற்றும் அவரது மனைவி மாதுரி விஸ்வகர்மா ஆகிய தம்பதியினர் விவசாயி நவலடி நாச்சியப்பனின் தோட்டத்தில் தங்கி பட்டுக்கூடு வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களில், மாதுரி விஸ்வகர்மா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்றுமுன்தினம் மதியம் சாப்பிட்டுக் கொண்டிருந்த திலக்நாயக், மீன் குழம்பு ஏன் ருசியாக இல்லை என்று கூறி தனது மனைவியைக் கடுமையாகத் திட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
இதனால் மனமுடைந்த மாதுரி விஸ்வகர்மா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு வேலை முடிந்து திரும்பிய திலக்நாயக், மனைவி பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், கணவர் திட்டியதால் கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்து கொண்ட விபரீதம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
