சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட பிரவீன் சக்கரவர்த்தி, பிட்ஸ் பிலானியில் பொறியியல் பட்டமும், அமெரிக்காவின் வார்டன் பள்ளியில் எம்பிஏ பட்டமும் பெற்ற பொருளாதார மற்றும் தரவு மேலாண்மை வல்லுநர் ஆவார். ஐபிஎம், மைக்ரோசாப்ட் போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய இவர், 2009 முதல் மன்மோகன் சிங் அரசாங்கத்தின் தொழில்நுட்பக் குழுக்களில் பங்காற்றினார். பின்னர் ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து, 2019 தேர்தல் அறிக்கை தயாரிப்பு மற்றும் கட்சியின் தரவு பகுப்பாய்வுப் பிரிவின் தலைவராகச் செயல்பட்டு ராகுலின் நம்பிக்கைக்குரிய நெருங்கிய ஆலோசகரானார்.
தமிழக அரசியலில் கவனம் செலுத்தி வந்த இவர், கடந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட முயன்றார். தொடர்ந்து தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க தீவிரமாகச் செயல்பட்டதுடன், விஜயின் வெற்றிக்குப் பின் அவருக்கு ஆதரவு அளிக்கவும் ராகுல் காந்தியை வலியுறுத்தினார். விஜய் மற்றும் ராகுல் இருவரிடமும் நெருக்கமான செல்வாக்கைப் பெற்றதன் மூலம் தமிழகத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாகத் தேர்வானார்.
தற்போது மத்திய அரசியலைக் காட்டிலும் தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட விரும்பும் பிரவீன் சக்கரவர்த்தி, எம்.எல்.ஏ.வாகி தமிழக அமைச்சரவையில் இடம்பெற ஆசைப்படுகிறார். இவரது பொருளாதார பின்னணி காரணமாக முதல்வர் விஜயும் இவரைத் தனது அமைச்சரவையில் சேர்க்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதற்காகத் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, காலியாக உள்ள ஒரு சட்டசபை தொகுதியில் போட்டியிடவும் அவர் தயாராக உள்ளார்.
